வருடப்பிறப்பில் தேரேறிவரும் முருகனே..(சிறப்பு)
ஈழத்திருநாட்டின் இருதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். இப்புண்ணியபூண்ணிய பூமியில் இற்றைக்கு இருநூற்றி ஜம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான திருக்கோவில் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில். தமிழர்பண்பாட்டில் முருகவழிபாடு என்பது தனித்துவமானது. மிக நீண்ட வரலாறு கொண்டது. பழம் பெரும் கிராமமாகிய நீர்வேலிக்கிராமம் முற்றுமுழுதாக முருகவழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்தில் சைவசமயத்தவரைத் தவிர்ந்த பிற மதத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை பாரம்பரியமாகக் காணப்பட்டது.எமதூரின் சிறப்பையும் வனப்பையும் அதிகரிக்கும் அழகை கொண்டுள்ள நீர்வைக்கந்தன் நீர்வேலியின் பிரதான நுழைவாயிலாக அமைந்துள்ளான்.எல்லோர் மனங்களிலும் ஆழமாக அமர்ந்து அவர்களுக்கு அருளாட்சி செய்து வரும் எம்பெருமானுக்கு தேர்த்திருவிழா.இந்நன்நாளில் நீர்வைக்கந்தனை வணங்கி எல்லா மக்களும் எல்லா நலனும் பெறவேண்டும் என்றும் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து வடம்பிடிப்போமாக.
— நீர்வேலி இணையம்
…………………………………………………………………………………………………………..
நீர்வேலி கந்தசுவாமி கோவில் இரதோற்சவம்
முருகப்பெரமான் அடியார்களே
நீர்வேலிதனில் எழுந்தருளி பல நூற்றாண்டு காலமாக அடியவர்களுக்கு திருவருளைப் பொழிந்து வரும் கந்தசாமியாருடைய இரதோற்சவப் பெருவிழாவினிலே பக்த பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளை பெற்று சீரும் சிறப்புமாக அனைத்துப் பெறுபேறுகளும் யாவரும் பெற்றிடவும் கல்வியிலும் உத்தியோகத்திலும் விவசாயத்திலும் உயர்வுபெற்றடவும் நாட்டில் சாந்தி சமாதானம் பொருளாதார வளர்ச்சி பெற்று மேலோங்கிடவும் எல்லோருக்கும் நல்லருள் கிட்டவும் நீர்வைக்கந்தனின் பாதாரவிந்தங்களை தழுவி பணிந்து பிரார்த்திப்பதோடு தொடர்ந்து வரும் திருவிழாக்களிலும் கலந்துகொண்டு திருவருளைப்பெறும் வவண்ணம் இறைஞ்சுகிறேன்.
”மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
ஆலய பிரதமகுரு
சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்கள்
………………………………………………………………………………………………………………………..
சொல்வேந்தர் ஆறுதிருமுருகன் அவர்கள் நீர்வைக்கந்தனை போற்றி வழங்கிய வாழ்த்துரை
அருள்ச்சிறப்பும் திருவருள் பெருமையும் நிறைந்த நீர்வைக்கந்தப் பெருமான் தேரேறிவரும் திருநாள் குறித்து வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன்.பழம்பெரும் திருக்கோவிலாகிய நீர்வைக்கந்தன் ஆலயத்தின் சிறப்பு போற்றுதலுக்குரியது. கந்தபுராணத்திற்கு உன்னத மதிப்புக்கொடுத்த இவ்வாலயம் அப்பாரம்பரிய நெறியில் நின்று பெருமைபெற்றது.அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிவ ஸ்ரீ இராஜேந்திரக்குருக்கள் அவர்கள் பிரதமகுருவாக விளங்கி இத்திருக்கோவிலை ஆற்றுப்படுத்தினார்.இன்று அவரது ஏக புதல்வன் சிவஸ்ரீ சுவாமிநாதக்குருக்கள் அவர்கள் தந்தையின் வழியில் பிரதம குருவாக விளங்கி கோவில் கிரிகைகளை வழிநடத்துகிறார். இவ் ஆலயத்தை காலத்துக்கு காலம் பரிபாலனம் செய்த பரிபாலனசபையினர் மிகவும் புனிதமாக பேணிக்காத்து வருகின்றனர்.யாழ் குடாநாட்டில் மிகஅற்புதமான நாகபட பந்தல் அமைத்து திருவிழா செய்த திருக்கோவில் என்ற பெருமை இக் கோவிலை சாரும்.இக் கோவில் திருவிழாவைக்காண்பதற்கு பல ஊர் மக்கள் நீர்வேலி நோக்கி வரும் வழக்கங்கள் இருந்தது.பண்டிதர்கள் பாவலர்கள் வித்துவான்கள் என பலர் நீர்வைக்கந்தன் ஆலயத்தில் புராணப்படிப்பு சமயப்பிரசங்கம் சிவதீட்சை போன்ற நெறிமறைகளை காத்தனர்.இப்புண்ணிய திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் யாழ் குடாநாட்டில் உள்ள மிகப்பெரிய விக்கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.நீர்வைக்கந்தனின் திருநாமம் போற்றி என் வாழ்த்தினை சமர்ப்பிக்கின்றேன்.
வேலுண்டு பயமில்லை
அன்புடன்
திரு.ஆறுதிருமுருகன்
தலைவர்
துர்க்காதேவி தேவஸ்தானம்
………………………………………………………………………………………………………………………………….
முருகன் துணை
நீர்வையம்பதியில் எழுந்தருளி கோவில் கொண்டு சகலருக்கும் தனது அருட்கடாட்சத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் எம் நீர்வைக்கந்தன் சித்திரை வருடப்பிறப்பன்று வள்ளி தெய்வானை சமேதராக சித்திரத் தேரேறி வீதி உலா வருகின்றார். இவ் அரும்பெரும் கண்கொள்ளாக்காட்சியை நியூ நீர்வேலி இணையத்தினூடாக புலத்தில் இருக்கின்ற நாமெல்லாம் கண்டு தரிசித்து கந்தப்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றோம். இம்முறை இவ்வரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தி வழங்கிக் கொண்டிருக்கும் நியூநீர்வேலி இணையத்தினருக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.
நீர்வைக்கந்தனின் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைத்து நல்வாழ்வு வாழபிரார்த்திக்கின்றேன்.
கந்தன்அடியவன்
ஜீவாகோபாலசிங்கம்
கனடா.
…………………………………………………………………………………………………………….
நீர்வைக்கந்தன் தேர்த்திருவிழா காண வாரீர்
ஆலயம் என்கிற சொல் ஆன்மா ஒடுங்கும் இடம் என்றும் ஆணவம் ஒடுங்கும் இடம் என்றும் பொருள் கொள்வர் சான்றோர்.தேவாலயமானது எங்கும் வியாபகரமாய் மறைந்திருக்கும் கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சாந்நித்தியராய் எழுந்தருளி இருக்கும் இடமாகும்.நீர்வேலிக்கந்தனும் நாம் உய்யும் வண்ணம் தோற்றம் பெற்றவனே.வழிபாட்டின் மூலம் நீர்வைமக்கள் அறிகுறியாக அறிவைப்பெருக்கியும் அருள்நெறியாக அன்பைவளர்த்தும் அனுபவவாயிலாக அழியாப்பேரின்பத்திற்கு அடிகோலியும் பெருவிழா உற்சவங்களில் தம்மை ஆற்றுப்படுத்தியும் வருகின்றனர்.செந்திமிழ் வளர்ச்சியிலும் சிவநெறி ஈடுபாட்டிலும் சிறந்து நிற்பவர்கள் நீர்வைமக்கள்.நிறைந்திருக்கும் பக்தி உணர்விற்கு இங்கு நடைபெறும் திருவிழாக்களும் வழிபாடுகளும் சான்று கூறுவன.பெருவிழாக்களில் இடம்பெறும் தேரோட்டம் மக்கள் மனதில் சமய எழுச்சியையும் பேதமற்ற மனப்பான்மையையும் விருந்தோம்பும் பண்பாட்டையும் விளக்கக் காண்கின்றோம்.
பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் நின்று அதனைப்படைத்தும் காத்தும் அழித்தும் மறைந்தும் அருளும் இறைசன் பிரபஞ்சமாகிய தேரின் உள்ளேயும் வெளியேயும் நின்ற வள்ளி தெய்வானை சமேதராக ஆரோகணித்து உலாவருகின்றவேளை புதுவருடத்தோடு கூடிய இந்நாளிலே எல்லோருக்கும் அருட்கடாட்சம் கிட்டவும் அமைதியும் மகிழ்வும் பூக்கவும் அன்பர்க்கு நல்லபலன் கிட்டவும் வாழ்த்துவோம் வணங்குவோம் .போற்றி உய்வோமாக.
திரு.துரை எங்கரசு
ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்
நீர்வேலி.
……………………………………………………………………………………………………
நீர்வைக்கிழாரின் பிரார்த்தனை
வல்வினை நீக்கும் வடிவேலன்
வாகாய்த் தேரேறி வந்தெங்கள்
தொல்வினை நீங்க வரமீந்து
தூய நன்நெறி வாழ்வளிப்பான்
சொல்வினை அவனைப் பாடிடுவோம்
சுந்தரத் தமிழால் போற்றிடுவோம்
நல்வினை நம்பதி செழித்திடவே
நம்சண் முகனே அருளிடையா
– செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன்
0 Comments