வாழையடிவாழையை நீர்வேலியில் இருந்து வாழ்த்துகிறோம்
கனடாவில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினரால் நடாத்தப்படும் வாழையடிவாழை 2013 ஐ நாங்கள் தாயகத்தில் இருந்து உளமாரவாழ்த்துகிறோம். இந்நிகழ்வில் எமது ஊரில் பிறந்து தற்போது கனடா நாட்டில் வாழும் அனைத்து நீர்வேலி உறவுகளும் ஒன்று கூடி மகிழும் இனிமையான அந்தவேளை நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் அதன் மகிமையையும் அவர்கள் போற்றுவார்கள். அதன்போது தங்களுக்கு பின்னரான அடுத்த தலைமுறைக்கும் எமதூரின் சிறப்பையும் பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் போன்ற அனைத்தையும் கடத்துவார்கள் என நம்புகிறோம்.நீர்வேலி மக்கள் எங்கு சென்றாலும் எமது ஊரையும் ஊரில் பிறந்து வாழ்ந்த காலங்களையும் வாழ்ந்த வாழ்க்கையினையும் சொந்தங்களையும் மறப்பதில்லை. இதனை நிவர்த்தி செய்வதற்கு வாழையடிவாழை களம் அமைக்கிறது.கனடா வாழ்நீர்வேலிச்சொந்தங்கள் அனைவரும் இதுபோல் இனிவரும் காலங்களிலும் மிகப்பிரமாண்டமாக வாழையடி வாழையை கொண்டாட வேண்டும் என்றும் அனைவரிடமும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.நீங்கள் உங்கிருந்து நீர்வேலி மீது காட்டும் ஊர்ப்பற்று ஆர்வம் கரிசனை என்பன இங்கு நீர்வேலியில் வசிப்பவர்களுக்கு ஊரின் மீதுள்ள பற்றினை மேலும் அதிகரிக்கச்செய்கிறது.நீர்வேலியில் பிறந்த அனைவரும் புகழோடும் வசதிகளோடும் வாழவேண்டும் எமது இணையத்தின் விருப்பமாகும்.நீர்வேலியை போற்றிவாழுங்கள்.எமது ஊரில் பிறந்ததினால் நாம் பெருமையடையவேண்டும்.வாழையடிவாழை 2013 இனிதே நடைபெற எங்களது இணையம் தனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது.
…………………………………………………………………………………………………………………..
நீர்வேலியின் புகழ் பரவட்டும்…………………………………..
நீர்வேலி மக்கள் ஒன்றுகூடி களிப்புற்று நீர்வேலியின் புகழை ஓங்கிஒலிக்கச்செய்யவும் வாழையடிவாழை எனும் இந்த அரிய நிகழ்வை ஏற்படுத்தியவர்களுக்கும் பங்களிப்போருக்கும் சகலசெல்வங்களும் கூடிய நல்வாழ்வும் நற்சுகமும் கிடைக்க எல்லாம் வல்ல நீர்வைக்கந்தன் அருள்புரிய முருகனின் பாதாரவிந்தங்களைப்பணிகிறேன்.
பிரம்மஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்கள்
நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானம்.
……………………………………………………………………………………………………………………………………
நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்..
15 ஆண்டுகளாக இந்த பிரமாண்டமான விழாவினை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினருக்கு எமது இலண்டன் கிளை சார்பாக வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறோம்.தங்களால் நீர்வேலியில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித்திட்டங்கள் இந்த ஆண்டும் வாழையடிவாழை 2013 மூலம் நிறைவேறவேண்டும்.இவ்விழாவில் பங்குபெறும் நிர்வாகஉறுப்பினர்கள் ஊரவர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
திரு.மா.திருவாசகம்
தலைவர்
நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன்.
இலண்டன்
……………………………………………………………………………………………………………………………………..
இனிவரும் காலங்களிலும் உங்கள் பணி தொடரட்டும்………
நீர்வேலி நலன்புரிச்சங்கம் – கனடா அமைப்பினால் 15 வருடமாக வாழையடிவாழை எனும் நிகழ்சி நடாத்தப்பட்டு வருவது சாதாரணமான விடயமல்ல.அதற்காக எமது கனடா வாழ் நீர்வேலி மக்கள் நிறையவே சிரமப்பட்டுள்ளார்கள்.இனிவரும் காலங்களிலும் உங்கள் பணி தொடரவேண்டும் எனவும் இந்நிகழ்வில் பங்குபெறுகின்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
திரு.செ.சுபேஸ்குமார்
பொருளாளர்
நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன்.
இலண்டன்
………………………………………………………………………………………………………………………………….
நீர்வேலி நலன்புரிச்சங்கம் – கனடா அமைப்பினால் காலம் தவறாது நடாத்தப்படும் வாழையடி வாழை நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்குவதில் புளகாங்கிதம் அடைகிறேன். கல்வியைக் கண்ணாகக் கொண்டு இயங்கும் நலன்புரிச்சங்கம் நீர்வேலிக் கிராமத்தின் கல்வி அபிவிருத்திக்கு மட்டுமன்றி கனடாவில் வாழும் இளைய தலைமுறையினரின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றின் மேம்பாட்டுக்கும் உழைத்து வருவது பாராட்டுக்குரியது.நீர்வேலிக் கிராமத்திலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கும் நலன்புரிச்சங்கம் ஆற்றிவரும் உதவிகள் என்றும் நினைவில் கொள்ளத்தக்கன. ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம் என்ற பாரதியின் வாக்கை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் வெளியிடும் வாழையடி வாழை மலர் வானுயர புகழ் பெற்று விளங்க வாழ்த்துகிறேன்.
இ.குணநாதன்.
(முன்னாள் அதிபர்- அத்தியார் இந்துக் கல்லூரி)
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
நீர்வேலி மத்தி
நீர்வேலி
10.01.2014
………………………………………………………………………………………………………………………………….
வாழையடி வாழை வனப்புறட்டும்
கனடாவில் வாழும் எங்கள் நீர்வை மண்ணின் சொந்தங்கள் ஒன்று கூடி வாழையடி வாழை என்ற பெயருடன் எடுக்கும் விழா 15 ஆவது அகவை காண்பதை எண்ணி மகிழ்வடைகின்றேன். அப்பன் இல்லாவிட்டால்தான் தெரியும் அப்பனின் அருமை என்ற நம்மவர் பழமொழி பொருள் பொதிந்தது. தந்தையர் நாடு எனப் பாரதி குறிப்பிடுவதற்கு ஒப்பான எங்கள் நீர்வை மண்ணின் அருமையை உணர்த்துவதற்கு வாழையடி வாழை என்ற தலைப்பே போதுமானது.
ஊரில் உள்ள சொந்தங்களுக்கு உதவுதல் ஊரின் பெருமையை வெளிப்படுத்தல் என்பதற்கு அப்பால் கனடாவில் உள்ள நம்மவரின் இளந்தலைமுறை எங்கள் மீது பற்றுக் கொள்வதற்கும் இவ்விழா வழிசமைக்கின்றது. புதிய தலைமுறை எம்மை மறந்துவிடுமோ என நாம் கொள்ளும் கவலைக்கு இவ்விழா ஓர் ஓளடதமாக அமைகின்றது. இந்நிலையில் நீர்வை மண் குறித்த ஆங்கில விவரண ஆவணப்படம் ஒன்றின் தேவையும் மேலெழுகின்றது. எதிர்காலச் சந்ததியினர் தங்கள் வேர்களை என்றும் நினைந்திருக்குமாறு வகை செய்தல் வேண்டும்.
இன்று இத்தகைய விழா நடக்கின்றது என்பதையும் இதன் அருமருந்தன்ன காட்சிகளையும் உறவுப் பாலமாக நின்று எமக்கு உணர்த்தி நிற்பதில் புதிய நீர்வேலி இணையம் உன்னத பங்களிப்பை நல்குகின்றது. எங்கள் மண் பற்றிய உணர்வை புலம்பெயர் இளந்தமிழ் உறவுகளிடத்தில் விதைப்பதற்கும் கிராமிய இணையத் தளங்கள் பங்களிப்பை நல்க வேண்டும்.
வாழையடி வாழை வனப்புடன் அமைய வாழ்த்துக்கள்.
செந்தமிழ்ச்சொல்லருவி
ச.லலீசன் (நீர்வைக்கிழார்)
………………………………………………………………………………………………………………
நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினராகிய உங்களினால் வருடம்தோறும் நடாத்தப்படும் வாழையடி வாழை நிகழ்வு மிகவும் சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.புலம் பெயர்ந்து வாழும் தேசத்திலும் எமது பண்பாடு கலாச்சாரத்தினை மறவாது அதை பேணிக்காத்து வளர்க்கும் உங்கள் செயற்பாடு போற்றுதற்குரியது. கனடா தேசத்தில் வாழும் எனது கிராம மக்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல அரசகேசரி விநாயகரை பிரார்த்திக்கிறேன்.
நன்றி.
வைத்திய கலாநிதி . இராசேந்திரம் விசாகரூபன்
பல் வைத்திய நிபுணர்.
………………………………………………………………………………………………………………………………………………..
எமது நிறுவனம் உங்களின் பெருவிழாவை வாழ்த்துகிறது.நீர்வேலி மக்கள் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்துடனும் இந்தவாழையடிவாழை நிகழ்வினை கொண்டாட வேண்டும் என்று நீர்வேலியில் இருந்து வாழ்த்துகிறோம்.
சாரங்கா நகை மாடம்
யாழ்ப்பாணம்
………………………………………………………………………………………………………………………………………………………………….
0 Comments